ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டிய உட்சபட்ச பொறுப்பு இருப்பது நீதிமன்றங்களுக்கே. ஆனால் அங்கேதான் பணநாயகமும் அரசியல் நாடகங்களும் நடந்தேறி நீதிதேவன் நாட்டியமாடுகிறான். நீதித்துறை சாமானிய மக்களுக்கு சேவை செய்ய தேவை சீர்திருத்தம். நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் முறை, தேர்ந்தெடுப்பவர்களை தேர்ந்தெடுக்கும் முறை அதில் வெளிப்படைத்தன்மை, தாய்மொழியில் வழக்காடும் உரிமை, விகிதாச்சார இடப்பங்கீடு என்று மறுபரிசீலனை செய்து சீர்த்திருத்த வேண்டிய பல பிரச்சனைகள் உள்ளது. இவற்றையெல்லாம் சரிசெய்யாத வரை நீதித்துறை மீது சாமினிய மக்களுக்கு முழுநம்பிக்கை வராது.
பணக்காரர்களுக்கும் ஆளும் வர்க்கத்திற்கும் சாதகமான நீதிமன்றங்களில் எளிய மக்களுக்கு நீதி கிடைக்காது என்பதை உணர்ந்து செய்த கொலையை மறைத்து அதிலிருந்து தப்பித்த சுயம்புலிங்கம்(பாபநாசம்) குடும்பத்தை நமக்கு நன்றாக தெரியும். அதே சுயம்புலிங்கம் முகமதாக மாறி தன் மகளுக்கு ஏற்பட்ட அநீதியை எதிர்த்து நீதிமன்றத்தில் நீண்ட சட்டப்போராட்டம் நடத்தி போராடிப் பெற்ற நீதி தான் நேரு(Neru) திரைப்படம்.

அநீதியுடன் நடந்தாக வேண்டும் என்று தீர்மானிக்கும் வழக்கு மன்றத்தை கூட நீதியின் பக்கம் இழுக்கக் கூடிய அளவிற்கு வழக்காடி வாதம் செய்து ஆதாரங்களை சமர்ப்பித்து பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதியை வாங்கி தர உதவுகிறார் வழக்கறிஞர் மோகன்லால். குறிப்பாக “பாலியல் வன்புணர்வால் பாதிக்கப்பட்ட பெண்கள் எப்படி இருக்கனும்னு நினைக்கிறிங்க? அவமானத்துக்கு பயந்துகிட்டு எல்லாத்தையும் உள்ள மறைச்சுகிட்டு விதினு நினச்சு மனச தேத்திகிட்டு ஊமையா வாயடச்சுப் போய் நிக்கனும்னு நினைக்கிறிங்களா? காலம் மாறிடுச்சு புது தலைமுறையில பெண்கள் அப்புடி இல்ல அவங்க தெளிவா தைரியமா சொல்லுவாங்க யாரு என்ன எப்புடி நடந்ததுனு.. அத ஏத்துக்கமுடியாததுக்கு காரணம் உங்க வயசும் கூனிக்குறிகிய உங்க தாழ்வு மனப்பான்மையும் தான் better you try to change” என்று மோகன்லால் பேசுவது Awesome. இறுதி காட்சியில் குற்றவாளியை அடையாளப்படுத்த Court நடத்தும் பலப்பரீட்சையின் போது நடிகர் சித்திக் பாலியல் வன்புணர்வை நினைவுபடுத்தி வக்கிர புத்தியில் தரக்குறைவாக பேசி கவனத்தை திசை திருப்ப முயறற்ச்சித்தும் பார்வையற்றவரான நடிகை அனஸ்வரிய ரஞ்சன் அதை பொருட்படுத்தாது மனவலிமை கொண்டு குற்றவாளியை அடையாளம் காட்டும் முறையை உறுதிப்படுத்துவது திருப்தியான Climax.
பாலியல் வன்புணர்வுக்கு பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு எதிராக எதிர் தரப்பில் வாதாடும் நடிகை பிரியாமணி, கட்டாயத்தின் பேரால் பொய் சாட்சி சொல்லவரும் பெண்ணின் மனநிலை, தனிப்பட்ட வாழ்க்கையை வைத்து Character Assassination செய்யப்படும் அம்மா(ஸ்ரீதான்யா), இவ்வழக்கை மோஹன்லாலுக்கு கொண்டு சென்று அவரை எடுக்க வைத்து இறுதிவரை உதவியாக இருந்த நடிகை சாந்தி மயாதேவி போன்ற அனைத்து பெண் கதாபாத்திரங்களும், தத்தெடுத்த மகளின் நீதிக்காக தன் மகன்களையே எதிர்ப்பது தன்னையே குற்றவாளியாக்க முயற்சித்தும் தொடர்ந்து போராடும் தந்தையாக வரும் ஜெகதீஷின் நடிப்பு என அனைவரும் தங்கள் கதாபாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். பாதிக்கப்பட்டப் பெண் இறுதியில் தனக்கு நீதியை பெற்றுத்தந்த மோகன்லாலை தெரிந்துகொள்ளும் விதம் கல்லையும் கரைத்துவிடும்.
நேர்கொண்ட பார்வை திரைப்படம் போல் தொடக்கத்தில் வழக்கை எடுத்துக்கொள்ளாது பின் வாதாடுவது போன்ற நாயக காட்சி இருந்தாலும், முழுக்க Court Drama Scene-களாக இருந்தாலும் பார்ப்பவர்களை “Edge of the seat” லேயே வைத்திருப்பது இயக்குனர் ஜீது ஜோசபின் திறமை. விஷ்ணு சியாம் படத்திற்கு தேவையான பின்னணி இசையையும் ஒரே ஒரு பாடலை இறுதியிலும் தந்திருப்பதால் திரைக்கதையை விட்டு விலகாமல் தொடர்ந்து படம் பயணிக்கிறது. Editior V.S.விநாயக் Cinematographer சதிஷ் குருப் என்று படத்தின் பின்னணியில் வேலை பார்த்த மொத்த படக்குழுவினருக்கு பாராட்டுகள்.